அலுவலகம் பக்கமே வர வேண்டாம்…. வீட்டில் இருந்தே வேலையை பாருங்க…. டாடா குழுமம் மற்றும் விப்ரோ அட்வைஸ்…
கொரோனா வைரஸ் காரணமாக, அலுவலகத்துக்கு வர வேண்டாம். வீட்டில் இருந்தே வேலையை பாருங்க என டாடா குழுமம் மற்றும் விப்ரோ நிறுவனம் தங்களது பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளன.
கொரோனா வைரஸ் நம் நாட்டில் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இது தொற்று நோய் என்பதால் அடுத்தவர்களுக்கு எளிதாக பரவி விடும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் சினிமா தியேட்டர்கள், மால்கள் மற்றும் பள்ளிக்கூடங்களை பல மாநில அரசுகள் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளன. வெளிமாநிலங்களுக்கு செல்வதையும் தவிர்க்கும்படி பல மாநில அரசுகள் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் அலுவலகத்துக்கு வரவேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம் என டாடா குழுமம் மற்றும் விப்ரோ தங்களது நிறுவனங்களின் பணியாளர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களது பணியாளர்களில் வாடிக்கையாளர்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியமில்லாத பணியில் இருப்பவர்கள் வீட்டில் இருந்தபடி வேலை பார்க்கும்படி உத்தரவிட்டுள்ளது.
விற்பனை, மார்க்கெட்டிங் வாடிக்கையாளர் உறவு நிர்வாகம் போன்ற வாடிக்கையாளர்களை சார்ந்த பணியில் இருக்கும் பணியாளர்கள் வேலை ஏற்பாடுகளை சவுகரியமாக செய்து கொள்ளும்படி டாடா குழுமத்தின் சில நிறுவனங்கள் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. மேலும் கர்ப்பிணி பெண்கள், நாள்பட்ட சுவாச மற்றும் இதய நோய் உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளன.
விப்ரோ நிறுவனம் தனது அனைத்து ஐ.டி. பணியாளர்களையும் வீடு சாத்தியமான இடங்களிலிருந்து வேலை பார்க்கும்படி ஆலோசனை வழங்கியுள்ளது. அதேசமயம் அவர்களின் வேலையின்தன்மை அதற்கு அனுமதித்தால் அதனை செய்யலாம் என தெரிவித்துள்ளது. மேலும் எந்தவொரு திட்டத்தில் இடம்பெறாதவர்கள் மற்றும் அனைத்து உதவி பணியாளர்கள் தங்களது மேலாளர்களிடம் ஆலோசனை செய்த பிறகு வீட்டில் இருந்து வேலை பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் 10 பேருக்கு மேல் கொண்ட கூட்டத்துக்கு தடை விதித்துள்ளது. மேலும் பணியாளர்களின் அலுவலக பயணங்களையும் நிறுத்த விப்ரோ உத்தரவிட்டுள்ளது.