காதல் திருமணம் செய்த பெண்ணை வீடு புகுந்து கடத்திய பெற்றோர்! தரதரவென இழுத்து சென்ற பகீர் காட்சிகள்
காதல் திருமணம் செய்து மாமியார் வீட்டிலிருந்து பெண்ணை மிளகாய் பொடி தூவி இழுத்துச் கொண்டு காரில் கடத்தி சென்ற பெற்றோரால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலங்கானா மாநிலம் மேட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம் நர்சம்பள்ளியைச் சேர்ந்த ஜலகம் பிரவீனும், அதே கிராமத்தைச் சேர்ந்த ஸ்வேதாவும் காதலித்து வந்தனர். இவர்கள் நான்கு மாதங்களுக்கு முன்பு ஆர்ய சமாஜத்தில் பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதல் திருமணத்தை விரும்பாத ஸ்வேதாவின் பெற்றோர், தங்கள் மகளை பிரவீனிடமிருந்து எப்படியாவது பிரிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

இந்நிலையில் ஸ்வேதாவின் பெற்றோர் பால நரசிம்ம, மகேஸ்வரி, மாமா மோகன், தம்பி சாய் மற்றும் சிலர் பிரவீனின் வீட்டிற்குள் நுழைந்து ஸ்வேதாவை வீட்டில் இருந்து இழுத்து கொண்டு வெளியே அழைத்து வந்தனர். பிரவீன், அவரது தாயார் மற்றும் குடும்பத்தினர் தடுக்க முயன்ற நிலையில் அவர்கள் கண்களில் மிளகாய்ப் பொடியை வீசி, தாங்கள் கொண்டு வந்திருந்த கட்டையால் தாக்கினர். பின்னர் ஸ்வேதாவை காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். இதில் பிரவீனும் அவரது தாயாரும் காயமடைந்தனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தால் பொது மக்கள் பீதியடைந்தனர். இதனையடுத்து பிரவீன் குடும்பத்தினர் கீசரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து சி.சி.கேமிரா காட்சிகளை வைத்து ஸ்வேதாவை வலுக்கட்டாயமாக கடத்தியவர்கள் மீது வழக்கு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக இன்ஸ்பெக்டர் ஆஞ்சநேயுலு தெரிவித்தார்.


