கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? முடிவு மல்லிகார்ஜுன கார்கே கையில்..

 
கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? முடிவு மல்லிகார்ஜுன கார்கே கையில்..

கர்நாடகாவில் அடுத்த முதலமைச்சர் யார் என்கிற முடிவெடுக்கும் அதிகாரம் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி  135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களையும், , மஜத 19 இடங்களையும் , சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. பாஜக படுதோல்வி சந்தித்ததை அடுத்து தனது  முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். அத்துடன் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனயடுத்து ஆட்சியமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ், நேற்று எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

mallikarjun kharge

இதனிடையே கர்நாடகாவில் அடுத்த முதல்வர் யார் என்பதில் எதிர்கட்சித் தலைவர் சித்தராமையாவுக்கும், மாநிலத் தலைவர்  டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி இருந்து வருகிறது.  இரு தரப்பு ஆதரவாளர்களும் அடுத்த முதல்வர் கோஷம் எழுப்பி கோரிக்கை வைத்து வருகிறார்கள். அந்தவகையில்  கர்நாடகாவின் அடுத்த முதல்வர் எனக்குறிப்பிட்டு, சித்தராமையா வீட்டின் முன்பு தொண்டர்கள் பேனர் வைத்துள்ளனர். அப்போது பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்த டி.கே.சிவக்குமார், தனக்கும் சித்தராமையாவுக்கும்  தனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனவும், தாங்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

congress
 
இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும், அடுத்த முதல்வர் யார் என்கிற முடிவு எட்டப்படவில்லை. ஆனால் அதேநேரம் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கே இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கூட்டத்தை முடித்துக்கொண்டு டெல்லி சென்ற மல்லிகார்ஜுன கார்கே  அங்கு மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இதனை தொடர்ந்து டி.கே.சிவகுமார், சித்தராமையா ஆகியோரும் டெல்லி சென்று காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.