’10 வருடத்துக்கு முன் உயிரிழந்தவர்’ தடுப்பூசி போட்டுக் கொண்டாரா? : குஜராத்தில் நடந்த குளறுபடி!
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களுக்கு அவர்களது செல்போன் எண்களில் தகவல் கொடுக்கப்படும் நிலையில், அதில் பல குளறுபடிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் 10 வருடத்திற்கு முன்பு உயிரிழந்த நபர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக மெசேஜ் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் தகோத் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் தேசாய் என்பவருக்கு தான் அந்த மெசேஜ் வந்துள்ளது. இவரது தந்தை கடந்த 2011 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், அவர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக மெசேஜ் வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நரேஷ் தேசாய், இதனை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர், உயிரிழந்த நபரின் பேத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் இருவரது பான்கார்டு எண்ணும் ஒன்றாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த நபரின் பெயர் பட்டியலில் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்த தான் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
இதே போன்ற சம்பவம் தகோத் மாவட்டத்தின் மற்றொரு இடத்திலும் நடந்துள்ளது. ஷர்மா என்பவரது தாய் மாரடைப்பால் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்த நிலையில், அவர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மெசேஜ் வந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.