'உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி' - அயோத்தி சாமியார்

 
'உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி' - அயோத்தி சாமியார்

தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை வாளால் கிழித்து தீயிட்டு கொளுத்தியதோடு, அவரது தலைக்கு 10 கோடி ரூபாய் என அறிவித்துள்ள உத்திரப்பிரதேசத்தை சேற்ந்த சாமியாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றிய  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம் ஆகும். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் வேறு ஒன்றும் கிடையாது. சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். மத்திய அரசு கொண்டு வரும் விஸ்வகர்மா திட்டத்தை திமுக எதிர்க்கும்.” என பேசினார். 



இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சனாதனத்தை பற்றி அவதூறாக பேசிய தமிழக அமைச்சர் உதயநிதியின் தலையை கொண்டுவருவோருக்கு ரூ.10 கோடி சன்மானம் என அயோத்தியை சேர்ந்த சந்நியாசியான பரம ஹன்ஸ் ஆச்சாரியா அறிவித்துள்ளார். அத்துடன் உதயநிதியின் புகைப்படத்தை குத்திக் கிழித்து, அயோத்தியை சேர்ந்த சந்நியாசியான பரம ஹன்ஸ் ஆச்சாரியாவால் பரபரப்பு ஏற்பட்டது.