தொலைநோக்கி வைத்து தேடினாலும் காங்கிரசை எங்கும் காணவில்லை - அமித் ஷா கிண்டல்

 
amit shah

வடகிழக்கு மாநிலங்களில் தொலைநோக்கி வைத்து தேடினாலும் காங்கிரஸ் கட்சியை காணவில்லை என, தேர்தல் முடிவுகளை வைத்து அமித் ஷா கிண்டல் செய்துள்ளார். 

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மேகாலயா உள்ளிட்ட 3 மாநிலங்களின் சட்டப்பேரவை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அங்கு தேர்தல் நடைபெற்றது. அதன்படி, 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த 16ம் தேதி  வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதேபோல் நாகாலாந்து , மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த 3 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில், திரிபுரா மற்றும் நாகலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது. மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மேகாலயாவில் ஆளும் கட்சியான என்.பி.பி. கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், 2 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். இதனையடுத்து பாஜகவின் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 

congress

இந்நிலையில், மூன்று மாநில தேர்தல் முடிவு குறித்து பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியை கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:  மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் காங்கிரஸ் துடைத்து எறியப்பட்டுள்ளது. தொலை நோக்கி கொண்டு தேடிப்பார்த்தாலும் காங்கிரஸ் காண முடியாத அளவுக்கு வடகிழக்கில் காங்கிரஸ் படு அவமானகரமான தோல்வியை சந்தித்துள்ளது. திரிபுராவில் நான்கு இடங்களும், மேகாலயாவில் மூன்று இடங்களும் கிடைத்துள்ளன. நாகாலாந்தில் காங்கிரசுக்கு எதுவும் இல்லை. வடகிழக்கு, குஜராத், உத்தரப் பிரதேசம், கர்நாடகா என இந்தியாவில் எல்லா இடங்களிலும் மோடி மேஜிக் வேலை செய்யும். இவ்வாறு கூறினார்.