வருமானத்திற்கு அதிக சொத்து- உதவி ஆணையரின் ரூ.40 கோடி சொத்துக்கள் முடக்கம்
![ac](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/2296548948ce10238915b33258068818.png)
தெலங்கானாவில் காவல்துறை உதவி ஆணையர் வீட்டில் வருமானத்திற்கு அதிகமான சொத்து இருப்பதாக நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காவல்த்துறை உதவி ஆணையராக உள்ள உமா மகேஷ்வர் ராவ் வீடு உள்ளிட்ட ஏழு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பணம், நில ஆவணங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டது. மொத்தம் 17 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காட்கேசரில் 5, விசாகப்பட்டினம் சோடவரத்தில் 7 நிலங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், ஐதராபாத் அசோக் நகரில் 4 அடுக்குமாடி குடியிருப்பில் பிளாட், சமீர் பேட்டையில் 1 நிலமும், குகட்பள்ளியில் 1 நிலமும், மல்காசீரில் 1 நிலமும் வாங்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் ரூ.37 லட்சம் பணம், 87 சவரன் தங்க நகைகள், ரூ.3 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் இவற்றின் வெளிச்சந்தையில் ரூ.40 கோடி வரை இருக்கும். மேலும் இரண்டு லாக்கர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே உமாமகேஸ்வர ராவை கைது செய்யப்பட்டதாக இணை இயக்குநர் சுதீந்திரா தெரிவித்தார். இதனையடுத்து உமா மகேஸ்வர ராவ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உமாமகேஸ்வர ராவ் இதற்கு முன்பு இப்ராகிம் பட்டினத்தின் உதவி ஆணையராக இருந்தபோது அப்போது அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. நிலத் தகராறில் அதிக அளவில் பணம் வசூலித்ததாகவும், சாகித்யா இன்ஃப்ரா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் பணம் வசூலித்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக செயல்ப்பட்டதோடு மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக செயல்ப்பட்டு அவர்களிடமே பணம் வசூல் செய்ததாக குற்றச்சாட்டுள்ளது.