கர்நாடக முதல்வரை காங்கிரஸ் தலைமை முடிவு செய்ய எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்

 
DK Shivakumar

வரலாற்று வெற்றி கொடுத்த கர்நாடக மக்களுக்கும், கார்கே, ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Image

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு  கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ்,  ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் திட்டமிட்டபடி நேற்று ( மே 13) எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்த நிலையில், இறுதியில் 136 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.  ஆளும் பாஜக 65 தொகுதிகளில் மட்டுமே வென்று தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் தென்னிந்திய மாநிலங்களில் ஒரு மாநிலங்களில் கூட பாஜக ஆட்சியில் இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து ஆட்சியமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. 

அதன்படி, பெங்களூருவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. மேலிட பார்வையாளர்கள் சுஷில்குமார் ஷிண்டே, ஜிதேந்திர சிங், தீபக் பாபாரியா முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேர்தலில் வெற்றிப்பெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வரலாற்று வெற்றி கொடுத்த கர்நாடக மக்களுக்கும், கார்கே, ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கர்நாடக முதல்வரை காங்கிரஸ் தலைமை முடிவு செய்ய எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்க அதிகாரம் வழங்கி கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில்  135 எம்எல்ஏக்களும் 
ஒரு மனதுடன் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.