தேர்தல் ஆணையத்துக்கு கடிவாளம்.. தேர்தல் நடைமுறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

 
ECI -SC

பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு மூலமே தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டும் என  உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தற்போது வரை தன்னிச்சையாகவே செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை கொலீஜிய முறையில் நியமிக்க கோரி அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு  இந்த மனுக்களை விசாரித்து வந்தது.  இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.   இது இந்திய தேர்தல் நடைமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்த்திருத்தமாக பார்க்கப்படுகிறது.

  உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு வழங்கிய தீர்ப்பில், “நியாயமாக தேர்தல்கள் நடைபெற தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை. சட்டத்தின் ஆட்சிக்கு உத்தரவாதம் அளிக்காத தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு எதிரானது. ஜனநாயகம் மக்களின் சக்தியுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டின் வலிமை மிக உயர்ந்தது, மிகவும் சக்திவாய்ந்த கட்சிகளை வீழ்த்தும் திறன் கொண்டது.  சிபிஐ இயக்குநர் தேர்வு செய்யப்படுவது போல் தலைமை தேர்தல் ஆணையரும் தேர்வு செய்யப்பட வேண்டும். பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும். தலைமைச் தேர்தல் ஆணையரையும் இந்தக் குழுவே தேர்வு செய்ய வேண்டும்.

நீதிமன்ற தீர்ப்பு

எதிர்க்கட்சி வரிசையில் உள்ள பெரிய கட்சியின் தலைவர் குழுவில் இடம்பெற வேண்டும். பிரதமர் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் பேரிலேயே தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும். எனவே தேர்தல் ஆணையர் நியமன நடைமுறையை மாற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் இதற்காக சட்டம் இயற்றப்படும் வரை இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதைப் போலவே பதவி நீக்கம் செய்யும் முறையும் இருக்க வேண்டும். ” என்று  இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.