’தி கேரளா ஸ்டோரி’படத்திற்கு எப்படி தடை விதிக்கலாம்? - மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

 
supreme court

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்ததற்காக விளக்கம் கேட்டு மேற்கு வங்காள அரசுகக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது 

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”தி கேரளா ஸ்டோரி”.கேரளாவைச் சேர்ந்த  இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த  32,000 பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு  கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு, அங்கு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு,  ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று  காட்சிகள் அந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, விவாதப் பொருளாகவும் மாறியது.  இந்த படத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்தது. சென்னையில் 13 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது. கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து இந்த திரைப்படம் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்தன.

இந்நிலையில் சமூகப் பாதுகாப்பு கருதி மேற்கு வங்காளத்தில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை எதிர்த்து தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதிகள், 'நாடு முழுவதும் படம் திரையிடப்படுகிறது. மேற்குவங்காள அரசு ஏன் படத்தைத் தடை செய்ய வேண்டும், படம் திரையிடப்படுவதை ஏன் தடுக்க வேண்டும்? அனைத்து வகையான மக்கள் உள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.  படத்தின் நன்மதிப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது நல்லதாகவும் இருக்கலாம் அல்லது கெட்டதாகவும் இருக்கலாம் திரையரங்குகளுக்குப் போதிய பாதுகாப்பை வழங்குவது அரசின் கடமை என கூறினர். மேலும் படத்தை தடை செய்ததற்காக விளக்கம் கேட்டு மேற்கு வங்காள அரசுகக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.