"நடந்த உண்மை இதுதான்..! தேவையில்லாம வதந்தியை பரப்பாதீங்க"- பாடகி கல்பனா வெளியிட்ட வீடியோ

நான் நலமுடன் உள்ளேன், நான் தற்கொலை செய்ய முயன்றதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம், சம்பவ நாளில் வழக்கமாக எடுக்கக்கூடிய மருந்தினை அதிக அளவில் எடுத்துக் கொண்டதால் சுயநினைவு இழந்தேன் என பாடகி கல்பனா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என சினிமா உலகில் பிரபல பின்னணி பாடகியாக இருப்பவர் கல்பனா. ஐதிராபாத்தில் உள்ள அவரது வீடு 2 நாட்களாக பூட்டியிருந்ததாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து போலீசார் அவரது வீட்டிற்கு சென்று பூட்டியிருந்த வீட்டில் இருந்த கல்பனா சுயநினைவு இல்லாமல் இருப்பதை கண்ட போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்டதால், பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்றுள்ளார் என பல்வேறு செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை கல்பனா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மருத்துவமனை சிகிச்சையில் நலம் பெற்ற பாடகி கல்பனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” நான் கல்பனா ராகவேந்தர். என்னைப்பற்றியும் என் கணவரை பற்றியும் ஒரு தவறான வதந்தி பரவி வருவதால் அதனை விளக்க இந்த வீடியோ பதிவிடுகிறேன். நான் இந்த வயதில் பி.எச்டி. , எல்.எல்.பி. இன்னும் நிறைய விஷயங்கள் படித்துக்கொண்டிருக்கிறேன். மேலும் எனது இசைத் துறை மீதும் அதீத கவனத்துடன் வேலை செய்து வருகிறேன். இதனால் அதிக மனஅழுத்தம் இருப்பதால் எனக்கு ரெம்ப வருடமாக சரியாக தூக்கம் இல்லை. நான் இது தொடர்பாக மருத்துவரின் ஆலோசனையை பெற்றேன். அவர்கள் எனக்கு இன்சோம்னியா இருப்பதாக கூறி அதற்கான மருந்துகள் அளித்தனர்.
கடந்த செவ்வாய்கிழமை அன்று மருந்தின் அளவு அதிகமாக எடுத்துக்கொண்டதன் விளைவாக நான் எனது சுயநினைவை இழக்கும் நிலைக்கு சென்றுவிட்டேன். அதில் இருந்து மீண்டு இப்போது நான் நன்றாக இருப்பதற்கு காரணம் என் கணவர் அன்று பட்ட கஷ்டம் தான். என் கணவர் வெளியூரில் இருந்தார். அவர் தான், போலீசுக்கு தகவல் கொடுத்து , உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்ததால் அவர்கள் சரியான நேரத்திற்கு வந்து என்னை காப்பாற்றி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனால் நான் உயிர்தப்பித்தேன். எனவே வதந்திகளையும் நம்பாதீர்கள். எனக்கு தனிப்பட்ட பிரச்சனை எதுவும் கிடையாது. எனது வாழ்வில் எனக்கு கிடைத்த நல்ல விஷயம் பிரசாந்த் பிரபாகர் கணவராக கிடைத்தது. அதுமட்டுமிலலாம் தயா பிரசாத் மகளாக கிடைத்தது. போலீஸ், மீடியா மற்றும் நான் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்த அனைவருக்கும் நன்றி.” எனக் கூறியுள்ளார்.