"பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் தோல்விக்கு, செல்வகணபதியின் மோசமான நிர்வாகமே காரணம்" - முன்னாள் தலைவர் சாமிநாதன்

 
tn

புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் தோல்விக்கு, மாநிலத் தலைவர் செல்வகணபதியின் மோசமான நிர்வாகமே காரணம் என்று புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

puducherry

இதுதொடர்பாக புதுச்சேரி மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமான சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில்,புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சிக்கு அமைப்பு ரீதியாக உறுப்பினர் சேர்க்கை நடத்தி கிளை, தொகுதி, மாவட்ட மற்றும் மாநிலத்தில் அனைவரின் ஒருமித்த கருத்தோடு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டது. பொறுப்பேற்ற அனைவரும் திறமையாக செயல்பட்டு கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து நிர்வாகிகளும் கடும் பணியாற்றி தேசிய தலைவர் சீரிய ஆதரவுடன் புதுச்சேரி மாநில சட்டசபைக்கு 6 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அதனால் கூட்டணி ஆட்சியில் பாரதிய ஜனதா கட்சி பங்கு பெற்றது. தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்டங்களும், முழுமையான மக்கள் நல பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள சம்பளங்கள் மற்றும் ஏழாவது ஊதிய குழு நிலுவைத் தொகை, முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டது. நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்த அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த வேலை வாய்ப்புகள் நேர்மையான முறைகளில் நிரப்பப்பட்டு மக்கள் விரும்பும் நல்ல அரசாங்கம் செயல்பட்டு வந்தது.

tn

இந்நிலையில் எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் திடீரென்று கட்சி கட்சித் தலைமைப் பொறுப்பேற்ற தற்போதைய தலைவர் திரு. செல்வகணபதி அவர்கள் தன்னுடைய மோசமான நிர்வாகத் திறமையால் காலங்காலமாக பாரதிய ஜனதா கட்சிக்கு சித்தாந்த ரீதியாக தன்னலமில்லாமல் செயல்பட்ட எண்ணற்ற அனுபவ நிர்வாகிகளை நீக்கிவிட்டு கிளை மற்றும் கேந்திரத்தை கலைத்து விட்டு சுயநலத்தோடு தன்னுடைய சொந்த நிறுவனம் போல் கடந்த ஆறு மாதங்களாக கட்சியை தவறாக வழி நடத்தி முதல் முறையாக ஆளுங்கட்சியில் அமைச்சராக உள்ள ஒரு வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டதற்கு புதுச்சேரி தலைவர் திரு.செல்வகணபதி அவர்களே முழு காரணம். எனவே தார்மீக பொறுப்பேற்று மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் பாரதிய ஜனதா கட்சியில் கடந்த முறை லாஸ்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எட்டாயிரத்திற்கும் அதிகமாக வாக்குகள் வாங்கி இரண்டாம் இடத்திற்கு வந்த என்னை தேர்தலில் பணியாற்ற விடாமல் சதி செய்து லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் அனைவரையும் ஓட்டு மொத்தமாக புறக்கணித்து “என் தொகுதி நான் வைத்தது தான் சட்டம்" என்று சுயநலமாக சிந்தித்து மட்டுமல்லாமல் பல நிர்வாகிகளை தொகுதியில் வேலை செய்ய விடாமல் தடுத்து புதுச்சேரியின் பாராளுமன்ற உறுப்பினரை காங்கிரசுக்கு தாரை வார்த்த பெருமை திரு. செல்வகணபதி சேரும். எனவே கட்சியின் எதிர்கால நலன் கருதி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.