அடங்காத கொரோனா... பிப்.15 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் - அரசு அறிவிப்பு!
இந்தியாவில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது கொரோனா. முதல் இரண்டு அலைகளை விட மூன்றாம் அலையில் அபரிமிதமாகப் பரவுகிறது. குறிப்பாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடம் மகாராஷ்டிரா தான். இந்தியாவில் முதன்முதலாக மூன்றாம் அலைக்கான அறிகுறி அங்கு தான் தென்பட்டது. பெரும்பாலான மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் முன்னரே மகாராஷ்டிராவில் உச்சம் பெற்றது. 2ஆம் அலையிலும் முதலில் பாதிக்கப்பட்டது மகாராஷ்டிரா தான். தற்போது புதிய வகை ஒமைக்ரானும் அங்கே தான் அதிகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அம்மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு என பரவலுக்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஜனவரி 10ஆம் தேதி வரை இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னமும் கொரோனாவின் தீவிரம் இன்னும் அடங்கியபாடில்லை என்பதால் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளை திறக்க பிப்ரவரி 15ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல 10 மற்றும் 12ஆவது மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகலாம் என அரசு கூறியிருக்கிறது. மேலும் ஆசிரியர்கள் நிர்வாக செயல்பாடுகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை. இதுதவிர அரசியல் மற்றும் மத கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. சலூன்கள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், ஜிம்கள், ஸ்பாக்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளதூ. தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே பேருந்து, ரயில்களில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்படலாம். ஆனால் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை தியேட்டர்களை திறக்கக் கூடாது. இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.