அதிகரிக்கும் கொரோனா.. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடல்..
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜனவரி 15 ஆம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கோரோனா பாதிப்பு அதி வேகமாக பரவி வருகிறது. இது போதாதென ஒமைக்ரானும் தன் பங்கிற்கு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் காட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஒரு பகுதியாக பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றனர். கொரொனா முதன்முதலாக டெல்லியில் தான் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஹரியானா, மும்பை, தெலங்கானா மாநிலங்களிலும் பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இதேபோல், உத்தரபிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் தொற்று பாதிப்புக்கு ஏற்ப மாவட்ட வாரியாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த வரிசையில் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்திலும் கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு புதிதாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஜனவரி 15 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பன்னா குப்தா, கொரொனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக மினி லாக்டவுன் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மக்கள் அதிகம் கூடும் இடங்களான நீச்சல் குளங்கள், பூங்காக்கள், மைதானம் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று கூறினார். அதேவேளையில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள இந்த 12 நாட்களும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் கூறினார். இதேபோல் திருமண நிகழ்வுகளில் 100 பேரும், துக்க நிகழ்வுகளில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.