கொரோனா அச்சுறுத்தலால் பள்ளி கல்லூரிகள் மூடல்... பஞ்சாபிலும் இரவு நேர உரடங்கு அமலாகிறது..
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பஞ்சாப் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதோடு பள்ளி, கல்லூரிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவது பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஏற்கனவே உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, மஹாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், டெல்லி, ஹரியானா, மும்பை, தெலங்கானா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்தவரிசையில் தற்போது, பஞ்சாப் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி, கல்லூரிகளும் தற்காலிமாக மூடப்பட்டுள்ளன. பஞ்சாபில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அங்கு தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,741 ஆக இருந்து வருகிறது.
இந்நிலையில் கொரொன மற்றும் ஒமைக்ரான் எதிரொலியால், ஜனவரி 15 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுவரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் , தொழிற்சாலைகளில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் எனவும், ஏசி பேருந்துகளில் 50 % பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தியேட்டர்கள், மால்கள், ஹோட்டல்கள், பார்கள், ஸ்பாக்கள் ஆகியவை 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிக்கப்படும் வாடிக்கையாளர்களும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டியது கட்டாயம். விளையாட்டு அரங்குகள், நீச்சல் குளங்கள், ஸ்டேடியம் , உடற்பயிற்சிக் கூடங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இரவு நேர ஊடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அத்தியவசிய தேவையின்றி, பொதுமக்கள் யாரும் வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் முறையாக முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே சேவை வழங்கப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.