பெரும் பரபரப்பு! சத்யேந்தர ஜெயின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
![satyendra](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/3a7fcc14b6d371342b256e5905b1429a.jpeg)
டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர ஜெயின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்தர ஜெயின். இதுதவிர உள்துறை, மின்சாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட இலாகாக்களையும் அவர் கவனித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை இவரை கைது செய்தது. இதனை தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுகிறது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்தது. சிறையில் தலை மசாஜ், கால் மசாஜ், முதுகு மசாஜ் என அனைத்து வசதிகளும் ஜெயினுக்கு அளிக்கப்படுவதாக புகார் அளிக்கப்பட்டது இந்நிலையில், திகார் சிறை குளியலறையில் இன்று காலை 6 மணியளவில் சத்யேந்திர ஜெயின் மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சத்யேந்தர ஜெயின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் முதலில் தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதன்பின்னர், அவரை லோக்நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) சேர்த்து தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.