சர்வாதிகாரத்தை மக்களால் முறியடிக்க முடியும் என்பதை கர்நாடகா நிரூபித்துள்ளது- சஞ்சய் ராவத்

 
sanjay rawat

சர்வாதிகாரத்தை மக்களால் முறியடிக்க முடியும் என்பதை கர்நாடகா நிரூபித்துள்ளது என சஞ்சய் ராவத் கூறியுள்ளார். 

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடயவுள்ளதை முன்னிட்டு அங்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி நேற்று நடைபெற்றது.  அதன்படி 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் ஆளுங்கட்சியான பாஜக 62 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்த நி்லையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறித்து சஞ்சய் ராவத் எம்.பி. கூறியதாவது: சர்வாதிகாரத்தை மக்களால் முறியடிக்க முடியும் என்பதை கர்நாடகா நிரூபித்துள்ளது. காங்கிரஸ் வெற்றிபெற்றுவிட்டது அப்படியென்றால் கடவுள் அனுமன் காங்கிரசுடன் உள்ளார் பாஜகவுடன் இல்லை என்பதை காட்டுகிறது. பாஜக தோல்வியடைந்தால் வன்முறை வெடிக்கும் என்று நமது உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். கர்நாடகா அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. எங்கு வன்முறை நடைபெறுகிறது?  பிரதமர் மோடி அலை ஓய்ந்து இப்போது நாடு முழுவதும் எங்கள் அலை வந்து கொண்டிருக்கிறது. இது 2024 மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தம் தொடங்கிவிட்டது. சரத் பவார் தலைமையில் இன்று ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் 2024 தேர்தல் குறித்து விவாதித்து அதற்கான ஆயத்தத்தைத் தொடங்குவோம். இவ்வாறு  கூறினார்.