சட்டப்பிரிவு 370 ரத்து.. பா.ஜ.க. அரசு செய்த மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு செய்த மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை நீக்கியது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சட்டப்பிரிவு 370 ரத்து முதல் சீனாவின் புதிய வரைபடம் உள்பட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்த பேட்டியில் எஸ்.ஜெய்சங்கர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு செய்த மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை நீக்கியது. காஷ்மீர் பற்றி நேர்மையாக சொல்கிறேன். 2019ல் அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தேன், எடுக்கப்பட்ட முடிவுகளில் ஈடுபட்டேன்.
இந்த சூழலை எப்படி இவ்வளவு காலம் சீர்குலைக்க அனுமதித்தோம் என்று ஒரு பகுதியினர் இன்னும் ஆச்சரியப்படுகிறார்கள். களத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் மிகவும் சாதகமாக உள்ளது. நான் 1979ல் அரசாங்கத்தில் (அரசு பணியாளர்) இணைந்தபோது அங்கு சென்றிருந்தேன். நான் 1979ல் சென்ற அதே இடத்திற்கு 2019ல் சென்றேன், எவ்வளவு சிறிதாக மாறிவிட்டது என்று ஆச்சரியப்பட்டேன். உலக கோதுமை நெருக்கடிக்கு இந்தியா தீர்வு கண்டது. சிக்கலான பிரச்சினைகளுக்கு எளிய தீர்வு காண்பதே நமது முயற்சி. ஜி20 உச்சிமாநாட்டின் மூலம் இந்த செய்தியை நம்மால் அனுப்ப முடிந்தால், நாம் வெற்றி பெற்றோம் என்று கூறுவேன்.
நான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது, கடந்த சில வருடங்களாக பல நாடுகள் நம்மிடம் பேச தொடங்கியுள்ளதை நான் கவனிக்கிறேன். அவர்கள் நம் திட்டங்களின் செயல்திறனையும் அளவையும் பார்க்கும்போது, இதை அவர்கள் உத்வேகமாக பார்க்கிறார்கள், மேலும் இதை பின்பற்ற செய்ய முடியும் என்று உணர்கிறார்கள். சீனா கடந்த காலங்களில் தங்களுக்கு சொந்தமில்லாத பிரதேசங்களுக்கு உரிமை கோரும் இது போன்ற வரைபடங்களை வெளியிட்டது. வரைபடத்தை வெளியிடுவது ஒன்றும் அர்த்தமல்ல. இந்த பிரதேசங்கள் இந்தியாவின் ஒரு பகுதியாகும். நம் பிரதேசங்கள் என்ன என்பது நமக்கு தெளிவாக தெரியும். அபத்தமான உரிமைகோரல்களை செய்வது மற்றவர்களின் பிரதேசங்களை உங்களுடையதாக ஆக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.