மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு!
சென்னையைப் போலவே புதுச்சேரியிலும் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. மழையால் பலரின் வீடுகள் சேதமடைந்தன. பயிர்கள் நாசமாகின. பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சில நாட்களுக்கு முன் மழை வெள்ள நிவாரணத்தை முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், மீனவர்களுக்கு ரூ.5 ஆயிரம் மழை நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதேபோல வெள்ளத்தில் பயிர் மூழ்கியிருந்தால் விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்ருக்கு ரூ.20 ஆயிரமும், சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து விவசாய கூலிகள், வீட்டு வேலை செய்வோர், அன்றாட உடல் உழைப்பு தொழிலாளர்கள் என அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் மழை நிவாரணம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் வலியுறுத்தின.
இதனை முதலமைச்சர் பரிசீலனை செய்வதாக தெரிவித்திருந்தார். அதன்படி மேற்குறிப்பிட்டவர்கள் தவிர சிவப்பு நிற ரேஷன்கார்டு வைத்துள்ள 30 ஆயிரம் பேருக்கும் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். இதனிடையே முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களான மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தற்போது அவர்களுக்கும் ரூ. 5,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.