புதுச்சேரியில் சிவப்பு ரேஷன்கார்டு வைத்திருப்பவர்களுக்கும் ரூ.5,000 மழை நிவாரணம்!
சென்னையைப் போலவே வடகிழக்குப் பருவமழை புதுச்சேரி, காரைக்காலையும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. மழையால் பலரின் வீடுகள் சேதமடைந்தன. பயிர்கள் நாசமாகின. பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே மழை வெள்ள நிவாரணத்தை முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், மீனவர்களுக்கு ரூ.5 ஆயிரம் மழை நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
வெள்ளத்தில் பயிர் மூழ்கியிருந்தால் விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்ருக்கு ரூ.20 ஆயிரமும், சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து விவசாய கூலிகள், வீட்டு வேலை செய்வோர், அன்றாட உடல் உழைப்பு தொழிலாளர்கள் என அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் மழை நிவாரணம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் வலியுறுத்தின. இதனை முதலமைச்சர் பரிசீலனை செய்வதாக தெரிவித்திருந்தார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஏற்கனவே மீனவர், கட்டட தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். இவர்கள் தவிர மற்ற சிகப்பு ரேஷன்கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணமாக வழங்கப்படும். ஏற்கனவே கட்டட தொழிலாளர்கள், மீனவர்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் மழை நிவாரணம் பெறுவர். மொத்த ரேஷன்கார்டில் எஞ்சிய 30 ஆயிரம் சிகப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மழை நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்" என்றார்.