ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி..

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 5 நாட்கள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 5 நாட்கள் பயணமாக அவர் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகருக்குச் செல்லும் ராகுல் காந்தி, 7ம் தேதி ஐரோப்பிய ஆணையத்தின் எம்.பிகளை சந்திக்கிறார். பின்னர் 8ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்லும் அவர், அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாடுகிறார். மறுநாள் ( 9ம் தேதி ) பிரான்ஸ் தொழிலாளர் சங்க கூட்டத்தில் கலந்துக்கொள்கிறார்.
10ம் தேதி நார்வேயின் ஆஸ்லோ நகருக்கு செல்லும் ராகுல், இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அப்போது பத்திரிக்கையாளர்களை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நடப்பாண்டிற்கான ஜி 20 உச்சி மாநாட்டினை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி20 மாநாடு டெல்லியில் நடைபெறும் சமையத்தில், ராகுல் ஐரோப்பிய நாடுகள் சுற்றுப்பயணத்தில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.