கர்நாடக தேர்தலில் ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது - ராகுல் காந்தி

 
Rahul Gandhi

கர்நாடக மக்களுக்கு இதயத்தில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடயவுள்ளதை முன்னிட்டு அங்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.  தற்போதைய நிலவரத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 138 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதேபோல் ஆளுங்கட்சியான பாஜக 62 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்த நிலையில், வெற்றிக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடக மக்களுக்கு இதயத்தில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடக தேர்தலில் வெற்றிக்கு பாடுபட்ட கட்சித்தலைவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடக தேர்தலில் ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு கூறினார்.