சிபிஎஸ்இ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

 
modi

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் கடந்த பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 16 லட்சத்து 60 ஆயிரத்து 511 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்நிலையில் இன்று  சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக 87.33 பேர் தேர்ச்சிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டு தேர்ச்சி விகிதம்  83.40 % ஆக இருந்தது. அதைவிட இந்த கல்வியாண்டில் தேர்ச்சி விகிதம் அதிகம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம்  16 லட்சத்து 60 ஆயிரத்து 511 மாணவ, மாணவிகள் எழுதிய நிலையில், 14 லட்சத்து 50 ஆயிரத்து 174 பேர் தேர்ச்சியடைந்துள்ளதாக  சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. குறிப்பாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் சென்னை மண்டலத்தில் 97.40 சதவிகித மாணவர்கள்  தேர்ச்சியடைந்துள்ளனர். சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களில் சென்று அறிந்துகொள்ளலாம் என சிபிஎஸ்இ தெரிவித்திருக்கிறது.
 
இந்த நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இளைஞர்களின் கடின உழைப்பு மற்றும் உறுதிக்காக நான் பெருமைப்படுகிறேன். இளைஞர்களின் வெற்றியில் மகத்தான பங்களிப்பை ஆற்றிய அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களையும் நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.