அம்மாடியோவ்... மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் ரூ.34 கோடி வருவாய்
பிரதமரின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் 34 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

அகில இந்திய வானொலி மூலம் மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வழங்கி வரும் மனதின் குரல் நிகழ்ச்சி நாடு முழுவதும் மக்களிடையே உத்வேகம் அளித்து வருகிறது. இந்த நிகழ்ச்சி மூலம் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், புதிய கண்டுபிடிப்புகள், சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் இந்தியர்கள் அளித்து வரும் அளப்பரிய பணிகள் குறித்து நாட்டு மக்களிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து வருகிறார். இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், கலைஞர்கள், தொழில் முனைவோர், விளையாட்டு வீரர்கள், சுயஉதவிக் குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்முயற்சிகள் குறித்தும் பிரதமர் விரிவாக எடுத்துரைத்து வருகிறார்.
வானொலி மூலம் ஒலிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சி வாயிலாக அரசுக்கு 34.13 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மாநில மொழிகளில் ஒலிபரப்பாகிறது. மேலும் இந்த நிகழ்ச்சி இலவச டிடி டிஷ், 48 ஆகாசவாணி வானொலி நிலையங்கள் மற்றும் 92 தனியார் தொலைக்காட்சிகளிலும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சி யூட்யூப், பிரசார் பாரதியின் ஓடிடி இணையதளம் மற்றும் நியூஸ் ஆன் ஏர் மொபைல் செயலி வாயிலாகவும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. மாநிலங்களவையில் இந்த தகவலை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.



