தொடர்ந்து 3வது நாளாக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு..

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் முழக்கத்தால், தொடர்ந்து 3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது .
2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்றது. அதானி குடும்பம் மீதான மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் விசாரணை நடத்தக்கோரி பிரச்சனை எழுப்பியதால், பெரும்பாலான நாட்கள் அவைகள் முடங்கியது. விடுமுறைக்குப் பின்னர் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் இரண்டாவது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதிலும் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதேபோல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொடர் முழக்கம் காரணமாக மீண்டும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில், கூட்டத்தொடரின் 3-வது நாளான இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கின. அப்போது, அதானி விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்களை எழுப்பிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். அதேவேளையில், ராகுல்காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஆளும் பாஜகவினர் கூச்சலில் ஈடுபட்டனர்.
இதனால் அவையின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை முடங்கிய சில நிமிடங்களில் மாநிலங்களவையும் முடங்கியது. இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3வது நாளாக நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டுள்ளதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகிறது.