இந்தியாவில் அடுத்த மாதம் ஒமைக்ரான் பாதிப்பு 5 லட்சத்தை எட்டும்... - அமெரிக்க சுகாதார நிபுணர் எச்சரிக்கை..
இந்தியாவில் அடுத்த மாதம் ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தை எட்டும் என அமெரிக்க மருத்துவ நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதி வேகமெடுத்திருக்கிறது.. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் பலருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் கண்டறியப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்களில் 3,071 பேருக்கு ஒமைக்ரான் பரவியிருக்கிறது. வைரஸ் பரவலைத் தடுக்க பல மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் ஓமைக்ரான் அலை தொடங்கியிருக்கிறது என்றும், டெல்டா வைரஸைவிட ஒமைக்ரானால் அதிகம் பேர் பாதிக்கப்படுவார்கள் என அமெரிக்காவைச் சேர்ந்த சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவன தலைவர் டாக்டர் கிறிஸ்டோபர் முர்ரே தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு டெல்டா வைரஸால் ஏற்பட்ட தாக்கத்தை விட ஒமைக்ரான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ஒமைக்ரானால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பிப்ரவரி மாதம் 5 லட்சம் வரை கூட உயரலாம் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.
ஒமிக்ரான் வைரஸின் வீரியம் குறைவானது தான் என்றும், ஒமைக்ரானால் பாதிக்கப்படுபவர்களில் 85 % பேருக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது என்றும் அவர் கூறியிருக்கிறார். தடுப்பூசிகள் செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அப்படி செய்வதன் மூலம் மட்டுமே ஒமைரானால் ஏற்படும் இறப்புகள் மற்றும் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுதில் இருந்து பாதுகாக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒமைக்ரான் பாதிப்பினால் உயிரிழப்பு ஏற்படுவது குறைவாகவே இருக்கும் என்றும் அமெரிக்க சுகாதார நிபுணர் தெரிவித்திருக்கிறார்.