சிறுவர்கள் சினிமா பார்க்க தடை! தெலங்கானாவில் அதிரடி உத்தரவு

தெலங்கானாவில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் காலை 11 மணிக்கு முன்னும் இரவு 11 மணிக்கு பின்னும் சினிமா பார்க்க தடை விதித்து தெலுங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் ஆகியோர் காலை 11 மணிக்கு முன்னும் இரவு 11 மணிக்கு பின்னும் சினிமா பார்ப்பதால் ஏற்படும் தூக்கம் கெடுதல் போன்ற காரணங்களால் அவர்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே காலை 11:00 மணிக்கு முன் திரையிடப்படும் சிறப்பு காட்சிகள் மற்றும் இரவு 11 மணிக்கு பின் திரையிடப்படும் சினிமாவை காண தடை விதிக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கான மனநிலை மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி விஜயேசன் ரெட்டி திங்கள் கிழமை நடைபெற்ற விசாரணைக்கு பின் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளை காலை 11 மணிக்கு முன் மற்றும் இரவு 11 மணிக்கு பின் நடைபெறும் சினிமா காட்சிகளை பார்க்க அனுமதிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு மீண்டும் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.