நிதி ஆயோக் கூட்டம்: மம்தா கூறியது முற்றிலும் தவறு - நிர்மலா சீதாராமன் விளக்கம்..

நிதி ஆயோக் கூட்டத்தில் மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது முற்றிலும் தவறானது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற 9வது நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் 9 மாநில முதலமைச்சர்கள் புறக்கணித்துள்ளனர். ஆனால் மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மட்டும் , கூட்டத்தில் பங்கேற்று சில முக்கிய கருத்துக்களை பேசவேண்டியுள்ளது என்று தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை நிதி ஆயோக் கூட்டத்திலும் பங்கேற்ற அவர் சிறிது நேரத்திலேயே வெளிநடப்பு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு 10-20 நிமிடங்கள் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் தனக்கு 5 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டு, பேசிக்கொண்டிருக்கும்போதே தன்னுடைய மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில் மம்தாவின் குற்றச்சாட்டு தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்க்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். அவர் பேசியதை நாங்கள் அனைவரும் கேட்டோம். ஒவ்வொரு முதல்வருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட நேரம் ஒவ்வொருவர் மேஜை முன்பும் இருந்த திரையில் காட்டப்பட்டது. திரையிலேயே முதல்வர்கள் பேசுவதை பார்க்க முடியும். அந்த வகையில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதையும் பார்த்தோம். தான் பேசும்போது, தனது மைக் துண்டிக்கப்பட்டதாக ஊடகங்கள் மூலம் மம்தா பானர்ஜி கூறி இருக்கிறார். இது முற்றிலும் தவறானது.
ஒவ்வொரு முதல்வருக்கும் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. நேரம் முடியும்போது அதை நினைவூட்டுவதற்காக கூட்டத்தை நிர்வகித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மைக்கில் தட்டி ஒலி எழுப்பினார். யாரெல்லாம் நேரத்தைக் கடந்து பேசினார்களோ அவர்கள் அனைவர் விஷயத்திலும் இது நடந்தது. ஆனால், தனது மைக் ஆஃப் செய்யப்பட்டதாக மம்தா பானர்ஜி கூறியது துரதிர்ஷ்டவசமானது. அது உண்மையல்ல.
மம்தா பானர்ஜி கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. அவரும் மேற்கு வங்கத்திற்காக பேசினார். அதோடு, அனைத்து எதிர்க்கட்சிகளுக்காகவும் பேசுவதாக அவர் கூறினார். அவர் பேசினார். நாங்களும் கேட்டோம். அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது என்பது அவருக்கு நினைவூட்டப்பட்டது. கூடுதல் நேரம் வேண்டும் என்று கேட்டு அவர் பேசி இருக்கலாம். சில மாநில முதல்வர்கள் அவ்வாறு பேசினார்கள். ஆனால், மம்தா பானர்ஜி அவ்வாறு செய்யவில்லை.
மாறாக, குற்றம் சாட்டுவதற்காக அதை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். உடனடியாக கூட்டத்தில் இருந்து வெளியேறினார். மேலும், தனது மைக் அணைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். அவர் அவ்வாறு பேசியது துரதிர்ஷ்டவசமானது. பொய்யின் அடிப்படையில் கதையை உருவாக்குவதற்கு பதிலாக, அவர் உண்மையைப் பேச வேண்டும்” என்று தெரிவித்தார்.