36 மருந்துகளுக்கு இறக்குமதி வரி தள்ளுபடி! - நிதியமைச்சர் அறிவிப்பு!

புற்றுநோய் உள்ளிட்ட உயிர்காக்கும் 36 மருந்துகளுக்கு இறக்குமதி வரி தள்ளுபடி செய்யப்படுவதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து 8வது முறையாக ஒன்றிய பட்ஜெட் 2025-2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டை புறக்கணித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் தாக்கலின் போது பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். வருமான வரி செலுத்துவதை எளிமையாக்கும் விதமாக புதிய வருமான வரி மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். புதிய வருமான வரிமுறையில் 12 லட்சம் ரூபாய் வரை உள்ள வருமானத்திற்கு வரியில்லை.
இந்த நிலையில், புற்றுநோய் உள்ளிட்ட உயிர்காக்கும் 36 மருந்துகளுக்கு இறக்குமதி வரி தள்ளுபடி செய்யப்படுவதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 200 புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.