மே. 6 ஆம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வருகிற 6 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 4 ஆம் தேதி வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகும் எனவும், இந்த மேலடுக்கு சுழற்சி 6-ந் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து , ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ அல்லது அதைவிட தீவிரமாகவோ வலுவடைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிலையில் இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை எந்த திசையை நோக்கி நகரும் என்கிற தகவல்கள் தெரியவில்லை. காற்றழுத்த தாழ்வுநிலை உருவானால் மட்டுமே எப்படி நகரும் என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுமா என்பதையும் இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
அதேநேரம் வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலம் பாந்தாவில் 116 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருக்கிறது. இதனால் வடமேற்கு, வடகிழக்கு, வடக்கு இந்தியாவில் 3 நாட்களுக்கு வெப்ப அலையாகவோ அல்லது தீவிர வெப்ப அலையாகவோ தொடரும் எஎனவும், அதற்கு பிறகு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.