ஆர்.பி.ஐ அல்லது வெளி மார்க்கெட்டிலிருந்து கடன் வாங்கி கொடுங்க! பிரதமருக்கு முதல்வர் நாராயணசாமி கோரிக்கை
மத்திய அரசு ரிசர்வு வங்கியிடமோ அல்லது வெளிமார்க்கெட்டிலோ கடனாக பெற்று மாநிலங்களுக்கு நிதி வழங்க வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, “கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டில் பல்வேறு மாநிலங்கள் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் மாநிலங்களுக்கான நிதியை மத்திய அரசு ரிசர்வு வங்கியிடமோ அல்லது வெளிமார்க்கெட்டிலோ கடனாக பெற்று வழங்க வேண்டும். புதுச்சேரி அரசு கோவிட் மருத்துவமனையில் 600 ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜிப்மரிலும் கூடுதல் படுக்கைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு எல்லா தளர்வுகளையும் அறிவித்துள்ளது. ஆகையால் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். விழிப்புணர்வு இல்லாததாலேயே நோய் தொற்று அதிகரிகிறது. மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு கொடுக்க வேண்டிய சிறப்பு நிதி உள்ளிட்ட எந்த நிதியும் வழங்காத நிலையில் மாநில வருவாயிலேயே மாநிலத்தை நிர்வகித்து வருகிறோம்” என தெரிவித்தார்.