வாக்காளரின் கன்னத்தில் ஓங்கி அறைந்த எம்.எல்.ஏ! ஆந்திராவில் பரபரப்பு

 
வாக்காளர்

ஆந்திராவில் வாக்களிக்க வரிசையில் செல்லாத எம்.எல்.ஏவிடம் வாக்காளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவைத் தேர்தலை பொறுத்தவரையில் ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இது தவிர ஒடிசா - 4, பிகார் - 5, ஜார்க்கண்ட் - 4, மத்திய பிரதேசம் - 8, மகாராஷ்டிரா - 11, உத்தர பிரதேசம் - 13, மேற்கு வங்கம் - 8, ஜம்மு காஷ்மீர் - 1 ஆகிய மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மேலும் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலும் இன்று ஒரே கட்டமாக 175 தொகுதிகளில் நடைபெறுகிறது. மேலும் ஒடிசா மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்டம் இன்று நடைபெறுகிறது.


இந்நிலையில் ஆந்திராவில் வாக்களிக்க வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்றதை சுட்டிக்காட்டிய வாக்காளரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ சிவக்குமார் ஓங்கி அறைந்தார். வாக்காளரும் பதிலுக்கு சிவக்குமாரை அடிக்க, அதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.வின் ஆட்கள் அந்த வாக்காளரை சரமாரியாக தாக்கினர். கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ.வை வாக்காளர் திருப்பி அடித்ததால் வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட எம்.எல்.ஏ சிவக்குமாரை தேர்தல் முடிவுகள் வரும் வரை வீட்டு காவலில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.