மணீஷ் சிசோடியாவை கைது செய்தது அமலாக்கத்துறை

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசு மதுபான கொள்கையை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியதோடு, சலுகைகளையும் அரசு வழங்கியதை குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதில் அம்மாநில துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியாவிற்கு தொடர்பு இருக்கலாம் எனவும் சிபிஐ சந்தேகிக்கித்தது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதை தொடர்ந்து, டெல்லி சிபிஐ அலுவலகம் முன்பு அவர் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். விசாரணைக்கு பின் மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கான சிபிஐ காவல் மார்ச் 20 ஆம் தேதிவரை உள்ள நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிஷ் சிசோடியாவிடம்,அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவில் மணீஷ் சிசோடியாவை கைது செய்வதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் புகார் கூறியுள்ளனர்.தற்போது சிறையில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.