20 விசில் அடித்தும் மட்டன் வேகாததால் ஆத்திரம்- குக்கரோடு போலீசில் புகார் அளித்த நபர்

 
20 விசில் அடித்தும் மட்டன் வேகாததால் ஆத்திரம்- குக்கரோடு போலீசில் புகார் அளித்த நபர்

ஆசையாக வாங்கிய மட்டன் குக்கரில் 20 விசில் அடிச்சும்   வேகாததால் சாப்பிட முடியாமல் ஆத்திரத்தில் குக்கரோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.


ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், தாடிபத்ரி பகுதியைச் சேர்ந்தவர் சோடாலா ஹாஜி. இவர் உகாதியை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள ஒரு கடையிலிருந்து ஆட்டிறைச்சி (மட்டன்) வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று  'தலைக்கறி' சமைக்கத் தொடங்கியுள்ளார். ஆனால், நீண்ட நேரம் சமைத்தும் இறைச்சி வேகாமல் கல்லுப் போலவே இருந்துள்ளது. கிட்டத்தட்ட 20 முறைக்கு மேல் விசில் விட்டும், இறைச்சி வேகாததைக் கண்டு ஆத்திரமடைந்த ஹாஜி, சமைத்த குக்கரை அப்படியே கையில் எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்றார். காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்த் ராவ் முன்னிலையில்  புகாரை வைத்தார். பணம் கொடுத்து கறி வாங்கினேன் ஆனால், எத்தனை முறை சமைத்தாலும் இது வேகவே மாட்டேன் என்கிறது. கடைக்காரர் என்னிடம் தரமற்ற கறியை விற்று ஏமாற்றிவிட்டார் என்று அவர் முறையிட்டார். இதைக் கேட்டு அங்கிருந்த போலீசார் ஒரு நிமிடம் திகைத்துப் போனார்கள். புகாரின் வினோதத்தைக் கண்டு சிரிப்பதா அல்லது சீரியஸாக எடுப்பதா என போலீசார்  பிறகு அந்த இறைச்சி விற்பனையாளரை உடனடியாக காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், ஒருவேளை அந்த ஆடு மிகவும் வயதானதாக இருந்திருக்கலாம், அதனால் இறைச்சி வேகாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளது எனத் கூறினார்.

இதனையடுத்து, போலீசார் முன்னிலையில் அந்த விற்பனையாளர், வேகாத இறைச்சிக்கு மாற்றாக புதிய மற்றும் தரமான இறைச்சியை வழங்க ஒப்புக்கொண்டார். இதனால் சமாதானமடைந்த ஹாஜி, தனது புகாரைத் திரும்பப் பெற்றுக்கொண்டு கிளம்பினார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஆனந்த் ராவ் கூறுகையில், "மக்களின் பிரச்சினைகள் எவ்வளவு வினோதமானதாக இருந்தாலும், அதற்குத் தீர்வு காண காவல்துறை கடமைப்பட்டுள்ளது. இந்தப் புகாரும் அவ்வாறே சுமுகமாக முடிக்கப்பட்டது," என்றார்.  தற்போது இந்தப் 'வேகாத மட்டன்' விவகாரம் தாடிபத்ரி பகுதி முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.