கர்ப்பிணி யானை கொலை வழக்கில் ஒருவர் கைது: கேரளா வனத்துறை!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதியில் கருவுற்ற யானை ஒன்று பசியுடன் சுற்றி திரிந்துள்ளது. இதனால் அந்த யானை பசி தாளாமல் ஊருக்குள் வந்துள்ளது. அங்கு மனிதர்கள் கொடுத்த உணவை சாப்பிட்டுள்ளது. அப்போது சிலர் அன்னாச்சி பழத்தில் வெடிமருந்து வைத்து யானைக்கு சாப்பிட கொடுத்துள்ளனர். யானை அதை சாப்பிட முயன்ற போது அந்த வெடிமருந்து வாயிலேயே வெடித்துள்ளது.
இதனால் பலத்த காயமடைந்த யானை வலி தாங்க முடியாமல் அங்கிருந்து மீண்டும் காட்டுக்குள் ஓடியுள்ளது. இருப்பினும் வலி தாங்க முடியாமல் ஆற்றில் இறங்கி நின்றுள்ளது. இதை அறிந்த வனத்துறையினர் இரண்டு யானைகளின் உதவியுடன் அதனை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் யானை பரிதாபமாக பலியானது.இந்த தகவல் இணையத்தில் கேரள வனத்துறை அதிகாரி ஒருவரால் பதியப்பட்ட நிலையில் பலரும் யானையை கொன்றவர்களுக்கு உரிய தண்டனை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையடுத்து இறந்த கர்ப்பிணி யானையின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், “யானையின் வாய் பகுதி வெடிபொருள்களால் வெடித்துள்ளது, இதனால் வாய் பகுதி முழுவதும் காயம் ஏற்பட்டு சீழ் பிடித்துள்ளது. இதனால் அந்த யானை கடுமையான வலியிலும், மன உளைச்சலிலும் இருந்துள்ளது. யானை கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு உணவு ஏதும் சாப்பிடாமல் இருந்திருக்கிறது. அதனால் தான் அந்த யானை நீரில் நின்ற படி சரிந்து விழுந்து இறந்துள்ளது. முக்கியமாக யானை தனது காயத்தின் வலியை தாங்கமுடியாமல் நிறைய தண்ணீரை உறிஞ்சியுள்ளது. அதனால் அதன் நுரையீரல் செயலிழந்து அது இறக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது”என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதுதவிர கோழிக்கோட்டிலிருந்து வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவினரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
https://twitter.com/ForestKerala/status/1268750269250039808
இந்நிலையில் கேரளா வனத்துறை தனது டிவிட்டர் பக்கத்தில், யானை கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதை அறிந்த மக்கள் இதில் சம்மந்தபட்ட அனைவருக்கும் உரிய தண்டனை வேண்டும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.