கேரளா: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..

கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கிய 700க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே வயநாடு சூரல்மலை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை 2 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு மீண்டும் ஒரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அட்டமலையில் இருந்து முண்டகை செல்வதற்கு இருந்த ஒரே ஒரு பாலலும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வயநாடு சூரல்மலையில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்ததாக கூறப்படுகிறது.
அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால், இதனை அறியாது வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர் அப்படியே மண்ணில் புதைந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 700க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கின்றனர். தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராணுவம் மற்றும் விமானப்படை, தேசிய மீட்புக் குழுவினர் என அனைத்து அரசு இயந்திரங்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை நடந்த மீட்பு பணியில் 66 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பலர் மண்ணில் புதைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.