கோவிட் கிட் கொள்முதலில் முறைகேடு- முன்னாள் முதல்வர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை
கோவிட் முறைகேடு புகாரில் எடியூரப்பா மற்றும் ஸ்ரீராமுலு ஆகியோருக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையிலான ஆணையம் சிபாரிசு செய்துள்ளதாக சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

கோவிட் காலத்தில் பிபிஇ கிட் கொள்முதல் உள்பட மருத்துவ உபகரங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்தால், அப்போது பாஜக முதல்வராக இருந்த எடியூரப்பா மற்றும் சுகாதார துறை அமைச்சராக இருந்த பி.ஸ்ரீராமுலு ஆகியோருக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையிலான விசாரணை ஆணையம் சிபாரிசு செய்துள்ளதாக மாநில சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறும்போது, “மாநிலத்தில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது, கொரோனா தொற்று பரவல் இருந்தது. தொற்று பரவல் தடுக்க மாநில சுகாதார துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக மருத்துவ துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் பயன்படுத்த பிபிஇ கிட் பயன்படுத்தப்பட்டது. இந்த பிபிஇ கிட் கொள்முதல் செய்தது உள்பட கோவிட் காலத்தில் வாங்கப்பட்ட பொருட்கள் மற்றும் பிற மருத்துவ செலவினங்களில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சியாக நாங்கள் (காங்கிரஸ்) இருந்தபோது குற்றம்சாட்டியதுடன், எந்தெந்த வகையில் முறைகேடு நடந்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து அப்போது ஆட்சியில் இருந்த பாஜ அரசிடம் அறிக்கை கொடுத்தோம். அந்த அறிக்கை மீது பாஜ ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவிட் முறைகேட்டில் ஈடுப்பட்டவர்களை காப்பாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கடந்தாண்டு நடந்த சட்டபேரவை தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், கோவிட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தோம். மக்கள் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய வாய்ப்பு கொடுத்ததை தொடர்ந்து, கோவிட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை கொடுப்பதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தோம். நீதிபதி குன்ஹா தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி முதல் கட்டமாக ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை அரசிடம் கொடுத்துள்ளது. இதில் கோவிட் காலத்தில் முறைகேடு நடந்துள்ளது உண்மை என்பதை உறுதி செய்திருப்பதுடன் இந்த முறைகேடு தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த பி.எஸ்.எடியூரப்பா மற்றும் அப்போது சுகாதார துறை அமைச்சராக இருந்த பி.ஸ்ரீராமுலு ஆகியோருக்கு எதிராக பிராசிகியூஷனுக்கு சிபாரிசு செய்துள்ளது.
நீதிபதி குன்ஹா தலைமையிலான விசாரணை ஆணையம் கொடுத்துள்ள சிபாரிசு செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைச்சரவை துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றுள்ளது. இரண்டாவது கூட்டம் நடத்துவதற்கு முன் சென்னபட்டனா உள்பட 3 சட்டபேரவை தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், 2வது அமைச்சரவை துணைக்குழு கூட்டம் நடத்துவது ஒத்தி வைக்கப்பட்டது. தேர்தல் முடிந்தபின் 2வது கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும். கோவிட் முறைகேடு தொடர்பாக நீதிபதி குன்ஹா தலைமையிலான விசாரணை ஆணையம் கொடுத்துள்ள அறிக்கை செயல்படுத்தும் விஷயத்தில் அரசு வேகம் காட்ட முயற்சிக்கவில்லை. நிதானமாக செயல்படுவோம். சட்டத்திற்கு உட்பட்டு தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க முடியாது. கோவிட் முறைகேடு நடந்துள்ளது உண்மை. கோவிட் காலத்தில் உள்நாட்டில் பிபிகு கிட் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கியிருந்த நிலையில், அப்போதைய பாஜ அரசு ஹாங்க்காங்கில் இருந்து கொள்முதல் செய்துள்ளதால் ரூ.14 கோடி முறைகேடு நடந்துள்ளது.
![]()
கோவிட் முறைகேடு விஷயத்தில் மாநில அரசு அரசியல் செய்ய விரும்பவில்லை. கோவிட் முறைகேட்டில் ஈடுப்பட்டவர்களிடம் பணம் வாபஸ் பெறுவது உள்பட பல சிபாரிசுகள் ஆணையம் செய்துள்ளது. எந்தெந்த வகையில் கோவிட் முறைகேடு நடந்துள்ளது, பிணத்தை வைத்து எப்படியெல்லாம் பணம் சம்பாதித்தார்கள், மக்கள் எந்தெந்த வகையில் பாதிக்கப்பட்டனர் என்பது உள்பட பல விவரங்கள் முதல் கட்டமாக கொடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி குன்ஹா தலைமையிலான ஆணையம் கொடுக்கும் இறுதி அறிக்கையில் இன்னும் பல முறைகேடுகள் தொடர்பான விவரம் இருக்கும் என்று தெரியவருகிறது” என்றார்.
இது குறித்து முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறுகையில், “கோவிட் காலத்தில் நாங்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை. உயிர் பலியில் இருந்து மக்களை காப்பாற்றுவதில் மட்டுமே முழு கவனம் செலுத்தினோம். ஓன்றிய அரசின் வழிகாட்டுதல் படி, கோவிட் காலத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுத்ததுடன், பிபிஇ கிட் உள்பட மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அரசியல் ரீதியில் பழிவாங்கும் நோக்கத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இதை சட்ட ரீதியில் சந்திப்பேன்” என்றார்.


