முதலமைச்சர் யார் என்பதை டெல்லி தலைமை முடிவு செய்யும் - டி.கே.சிவகுமார் பேட்டி

 
DK Sivakumar

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை டெல்லி தலைமை முடிவு செய்யும் என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார். 

கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி  135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களையும், , மஜத 19 இடங்களையும் , சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. பாஜக படுதோல்வி சந்தித்ததை அடுத்து தனது  முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். அத்துடன் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனயடுத்து ஆட்சியமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ், நேற்று எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனிடையே கர்நாடகாவில் அடுத்த முதல்வர் யார் என்பதில் சித்தராமையாவுக்கும், மாநிலத் தலைவர்  டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி இருந்து வருகிறது.  இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும், அடுத்த முதல்வர் யார் என்கிற முடிவு எட்டப்படவில்லை. ஆனால் அதேநேரம் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கே இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், கர்நாடக புதிய முதலமைச்சரை டெல்லி தலைமை முடிவு செய்யும் என்று டிகே சிவக்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரு வரியில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதை கட்சி மேலிடத்திடம் கொடுத்து விட்டோம். நான் டெல்லி செல்லவில்லை; என்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்துவிட்டேன். இன்று எனக்கு பிறந்தநாள் என்பதால் விழாக்கள், பூஜைகளில் பங்கேற்கபதற்காக பெங்களூருவில் இருக்கிறேன். புதிய முதலமைச்சர் யார் என்ற முடிவை டெல்லி தலைமையிடம் விட்டுவிட்டோம் அவர்கள் முடிவு எடுப்பார்கள். இவ்வாறு கூறினார்.