லாலு பிரசாத் யாதவ் உடல் நிலை மோசம்.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்
ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை கைதியான லாலு பிரசாத் யாதவுக்கு உடல் நிலை மோசமானதால், நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனமான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உடல் நலக் குறைவு காரணமாக, ராஞ்சியில் உள்ள ராஜேந்திர இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 2 தினங்களாக லாலு பிரசாத் சுவாசிப்பதில் சிக்கல் இருந்தது. அவரது உடல் நிலை மோசமாக இருப்பது குறித்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து லாலுவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் 2 மகன்களும், மூத்த மகள் மிசா உள்ளிட்டோர் ராஞ்சி வந்து மருத்துவமனையில் லாலு பிரசாத்தை பார்த்தனர். இந்நிலையில் நேற்று காலையில் லாலுவின் உடல் நிலை மோசமானதையடுத்து அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்தனர். மேலும், எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்களுடன் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று மாலை சாட்டர்ட் விமானத்தில் அவர் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, ஆர்.ஐ.எம்.எஸ். இயக்குனர் டாக்டர் காமேஷ்வர் கூறுகையில், லாலு பிரசாத்துக்கு கடந்த 2 தினங்களாக சுவாசிப்பதில் இருந்தது. வெள்ளிக்கிழமையன்று அவருக்கு நிமோனியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது வயதை (72) கருத்தில் கொண்டு, சிறந்த சிகிச்சைக்காக மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்துள்ளோம். இன்று (நேற்று) டெல்லி எய்ம்ஸ்க்கு மாற்ற வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.