"பணமிருந்தால் தேர்வு முடிவுகளை விலைக்கு வாங்க முடியும்”- ராகுல்காந்தி

 
Rahul Gandhi neet

பணமிருந்தால் தேர்வு முடிவுகளை விலைக்கு வாங்க முடியும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

நீட் குறித்து மக்களவையில் உரையாற்றிய எம்பி ராகுல்காந்தி, “நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது. நாட்டில் என்ன நடக்கிறது என்பது குறித்து லட்சக்கணக்கான மாணவர்கள் கவலை கொண்டுள்ளனர். இந்தியத் தேர்வு நடைமுறைகள் ஒரு மோசடி என்ற முடிவுக்கு இந்திய மாணவர்கள் வந்துள்ளனர். பணம் இருந்தால் தேர்வு முடிவுகளை சாதகமாக மாற்ற முடியும் என்பது தான் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அதைதான் எதிர்க்கட்சிகளும் நினைக்கின்றனர். இதை சரி செய்ய என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்? தேர்வு முறைகேடுகளை தடுக்க அமைப்பு ரீதியாக நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது தான் எங்களுடைய கேள்வி. நாட்டின் தேர்வு முறைகளில் மிகப்பெரிய பிரச்சனை இருப்பது அனைவருக்கும் தெரியும். நீட் தேர்வு மட்டுமல்ல அனைத்துத் தேர்வு முறைகளிலும் மாற்றம் தேவை. ஒன்றிய அரசின் தேர்வு முறை கேள்விக்குறி ஆகிவிட்டது” என்றார்.


இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “2 முறை உச்சநீதிமன்றம் சென்று, 2 முறையும் பொதுவான நுழைவு தேர்வை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் நீட் தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் தேர்வு நடைமுறைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இப்படி பேசுவது துரதிருஷ்டவசமானது. போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் மசோதாவை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது” எனக் கூறினார்.