பட்டென குறைந்தது கொரோனா : பொதுமக்களுக்கு ஓர் நற்செய்தி!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய நிலையில் முதல் அலை ,இரண்டாம் மலை என லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2020 மார்ச் மாதம் முதல் விதிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுவரை இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதார மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதேசமயம் மத்திய, மாநில அரசுகளின் முயற்சியினால் தற்போது பாதிப்பு என்பது இந்தியாவில் வெகுவாக குறையத் தொடங்கியுள்ளது. கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என்று விழிப்புணர்வை ஏற்படுத்திய மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணியினை துரிதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,579 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 543 நாட்களில் இல்லாத அளவுக்கு மிக குறைவான எண்ணிக்கையாகும். அதேபோல் ஒரேநாளில் கொரோனாவிலிருந்து 12,202 பேர் குணமாகியுள்ள நிலையில், 236 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.