இந்தியாவில் 2.5 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது 2.50 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி விட்டது. கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை என பாதிப்பு இருந்த நிலையில், தற்போது கொரோனா, ஒமிக்ரான் இணைந்து மூன்றாம் அலையாக பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் பாதிப்பு தற்போது இந்தியாவில் 27 மாநிலங்களில் பரவ தொடங்கிவிட்டது. இதனால் தொற்றை கட்டுப்படுத்த, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு, மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,47,417 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய தினசரி பாதிப்பை விட 27% அதிகம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் மொத்த எண்ணிக்கை 3,63,17,927 ஆக உள்ளது. அதேபோல் ஒரேநாளில் 84,825 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 11,17,531 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது 13.11% ஆக பதிவாகி வரும் நிலையில், ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,488 ஆக உயர்ந்துள்ளது.