20 நிமிடம் தலைகீழாக தொங்கிய ராட்டினம்! அலறிய மக்கள்

 
ச்

ஐதராபாத் நம்பள்ளி பொருட்காட்சியில் ராட்டினம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 20 நிமிடம் தலைகீழாக தொங்கி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நாம்பள்ளி  பொருட்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நேற்று காணும் பொங்கல் என்பதால் குடும்பத்துடன் பலர் பொருட்காட்சிக்கு வந்திருந்தனர். அப்போது அங்கிருந்த இரட்டை ராட்டினத்தில் பலர் ஏறி அமர்ந்தனர். சில நிமிடங்கள் ராட்டினத்தில் அமர்ந்திருந்தவர்களுக்கு சிலிர்ப்பைத் தரும் வகையில், தலைகீழாகத் சுற்றி திரும்பவும் கீழே இறக்கப்பட்டது. மீண்டும் மற்றொரு முறை மேலே சென்று தலைகீழாக திரும்பிய போது மீண்டும் கீழே இறங்காமல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்டக் ஆகி அப்படியே நின்று விட்டது. இதனால் அதுவரை குதூகலத்துடன் அமர்ந்திருந்தவர்கள், திடீரென உயிர் பயத்தில் அலறினர்.  உடனடியாக கீழே இருந்த அவர்களின் உறவினர்கள் கூச்சலிட்டு கதற ஆரம்பித்தனர்.


அதன் பிறகு ஒரு சிறப்புக் குழு இயந்திரத்தை ஆய்வு செய்து தொழில்நுட்ப கோளாறு சரி செய்தனர். இதற்கு 20 நிமிடங்கள் ஆனது. அதன் பின்னர் அதில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியே அழைத்து வரப்பட்டனர். இருப்பினும், நீண்ட நேரம் தலைகிழாக இருந்ததால் சிலர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறினர். எனவே அவர்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்த விமர்சனங்களைத் தொடர்ந்து, அனைத்து ராட்டினத்தையும் ஆய்வு செய்யுமாறு காவல்துறையினருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.