ட்ராபிக் சிக்னலுக்காக காத்திருந்த ஆட்டோ மீது மரம் விழுந்ததில் ஓட்டுநர் பலி
![Hyderabad: Driver killed as tree falls on auto in Himayath Nagar](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/d65e5fd36ac56adf5e20d4350116114d.jpg)
ஐதராபாத்தில் ட்ராபிக் சிக்னலுக்காக காத்திருந்த ஆட்டோ மீது நடைப்பாதையில் இருந்த பெரிய மரம் விழுந்ததில் ஆட்டோவில் இருந்த டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா ஐதராபாத்தில் நின்றிருந்த ஆட்டோ மீது பெரிய மரம் விழுந்தது. இந்த விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஐதராபாத் சோமாஜிகுடா எம்.எம்.எஸ். மக்தாவைச் சேர்ந்த முகமது கவுஸ் பாஷா ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இன்று வழக்கம்போல் ஹிமாயத் நகரில் இருந்து பஷீர் பாக் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். ஹைதர்குடா ஓல்ட் எம்எல்ஏ குடியிருப்பு சாலையில் போக்குவரத்து சிக்னலுக்காக ஆட்டோவை நிறுத்தினார்.
அப்போது நடைபாதையில் இருந்த பெரிய மரம் திடிரென ஆட்டோ மீது விழுந்தது. இந்த விபத்தில் ஆட்டோ நசுங்கி டிரைவர் பாஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் பாஷாவின் ஆட்டோவுக்கு முன்னால் இருந்த மற்றொரு ஆட்டோவும் சேதமானது என்று போலீசார் தெரிவித்தனர். மாநில பேர்ரிடர் மீட்பு குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு வந்து பெரிய மரத்தை வெட்டி அகற்றினர். ஹிமாயத் நகர் கோட்டத்தில், 15 முதல், 20 மரங்கள் இதுபோன்று முறிந்து விழும் நிலையில் இருந்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.