ஜெயிலுக்கு போக ஆசையா? அப்ப உடனே ரூ.2,000 பணத்தை கட்டுங்க! புதிய திட்டம் தொடக்கம்
தவறு செய்யாவிட்டாலும் பணம் செலுத்தி சிறைக்கு சென்று அதன் அனுபவத்தை உணரலாம்.

சிறைக்குள் எப்படி இருக்கும் என்பதை சாதாரண மக்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை. இந்தச் சூழலில் தெலங்கானா மாநில சிறைத்துறை சாதாரண மக்களுக்குச் சிறை வாழ்க்கையின் உணர்வை அனுபவிக்க வாய்ப்பு அளித்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள சஞ்சலகுடா மத்திய சிறையில் 'ஒரு நாள் சிறை வாழ்க்கை ( சிறையை உணருங்கள் ) என்ற புதுமையான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, எந்தக் குற்றமும் செய்யாத சாதாரண குடிமக்கள் வெறும் ரூ 500 கட்டணம் செலுத்தி, ஒரு உண்மையான கைதியைப் போல 24 மணி நேரம் சிறையில் கழிக்கலாம். இதைக் கேட்பதற்கு வேடிக்கையாகத் தோன்றினாலும், இதன் பின்னணியில் உள்ள விதிகள் மிகவும் கடுமையானவை. சிறைக்குச் செல்லும் ஒருவர் தனது சொந்த ஆடைகளைக் கழற்றி வைத்துவிட்டு சிறை அதிகாரிகளால் வழங்கப்படும் சீருடையை மட்டுமே அணிய வேண்டும். மேலும், மொபைல், கைக்கடிகாரங்கள் அல்லது வேறு எந்த மின்னணுப் பொருட்களும் உள்ளே அனுமதிக்கப்படாது.
சிறை அனுபவம் என்பது வெறும் சிறை அறையில் அமர்ந்திருப்பதோடு நின்றுவிடுவதில்லை. அங்குள்ள கைதிகளைப் போலவே, அவர்களும் அதிகாலையில் எழுந்து, சிறை உணவுப் பட்டியலின்படி வழங்கப்படும் பருப்பு, சாதம், சூப் போன்ற எளிய உணவுகளை உண்டு, சிறை வளாகத்தைச் சுத்தம் செய்தல் மற்றும் தோட்ட வேலைகள் போன்ற அதிகாரிகளால் ஒதுக்கப்படும் பணிகளைச் செய்ய வேண்டும். உறங்குவதற்குப் படுக்கையோ மெத்தையோ இல்லை. அவர்கள் தரையில் ஒரு பாய், ஒரு போர்வை மற்றும் தலையணையுடன் மட்டுமே இரவைக் கழிக்க வேண்டும். சுதந்திரம் இல்லாத வாழ்க்கை எவ்வளவு சுமையாக இருக்கும் என்பதையும், கடுமையான சிறை விதிகளுக்கு மத்தியில் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதையும் சாமானிய மக்களுக்குப் புரிய வைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சிறையின் கடுமையான வாழ்க்கையை, குறிப்பாகக் குற்றப் பாதையைத் தேர்ந்தெடுக்க நினைப்பவர்களுக்குக் காண்பிப்பதன் மூலம், அவர்களிடையே ஒரு மாற்றத்தைக் கொண்டுவர சிறைத்துறை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. சிறை அனுபவத்திற்கு ரூ 500 பணம் செலுத்தி உள்ளே சென்றவர்கள் பாதியில் வெளியே வர வேண்டும் என்றால் ரூ 1000 அபராதம் செலுத்தினால் மட்டுமே வெளியே வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா சிறையில் நடைபெற்ற அருங்காட்சியகம் மற்றும் சிறையை உணருங்கள் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் ஆளுநர் சிவபிரதாப் சுக்லா பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் திறந்தவெளி சிறைக் கொள்கை நல்ல பலன்களைத் தரும். நான் உத்தரப் பிரதேச அமைச்சராக இருந்தபோதும் சில சீர்திருத்தங்களை மேற்கொண்டிருந்ததை அவர் நினைவுபடுத்தினார். சிறைக்கு வரும் கைதிகளிடம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். கைதிகளை முழுமையாக அடைத்து வைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ஒரு இனிமையான சூழல் நிலவும்போது மட்டுமே அவர்களிடையே மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றார். இந்நிகழ்ச்சியில் சிறைத்துறை தலைமை இயக்குநர் சௌம்யா மிஸ்ரா மற்றும் பல மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

