அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு அமைப்பு.. உண்மை வெல்லும்- கவுதம் அதானி

 
 அதானி குழும பங்குகள்..

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கவுதம் அதானி வரவேற்றார். மேலும் உண்மை வெல்லும் என்று அவர் தெரிவித்தார்.

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது. இதனையடுத்து அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில்ன ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது. 

உச்ச நீதி மன்றம்

மேலும், இந்த குழுவுக்கு மத்திய அரசு, நிதி சார்ந்த சட்ட அமைப்புகள், செபி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை குழு இரண்டு மாதத்துக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி டிவிட்டரில், மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அதானி குழுமம் வரவேற்கிறது. இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதி முடிவை கொண்டு வரும். உண்மை வெல்லும் என பதிவு செய்துள்ளார்.

அதானி

அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் அதானி குழுமம் பல ஆண்டுகளாக முறைகேடான பங்கு கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடி திட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்று குற்றம் சாட்டியது. ஆனால் இதனை அதானி குழுமம் மறுத்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழும நிறுவன பங்குகளின் விலை கடும் வீழ்ச்சி கண்டது. மேலும், ஹிண்டன்பர்க்-அதானி விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.