மார்ச் 1ம் தேதி முதல் இலவச கொரோனா தடுப்பூசி : இவர்களுக்கு மட்டும்!
கொரோனா தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை குறுகிய காலகட்டத்திலேயே ஒன்றுக்கு இரண்டாக கண்டுபிடித்தது இந்தியா. 3 கட்ட பரிசோதனைகளிலும் தடுப்பூசிகள் வெற்றி அடைந்ததையடுத்து, உடனே மக்களுக்கு செலுத்தும் பணி முடுக்கி விடப்பட்டது. கடந்த மாதம் 16ம் தேதி நாடு முழுவதும் 3000 மையங்களில் முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
தடுப்பூசிகள் குறித்து பல்வேறு வதந்திகள் எழுந்ததால் அதிகாரிகள் தாங்களே தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு உதாரணமாக திகழ்ந்த நிலையில், தடைகள் பல தாண்டி தடுப்பூசி வெற்றி கரமாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மார்ச் 1ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் இருப்பவர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் மட்டுமே தடுப்பூசி இலவசமாக போடப்படும். தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டணம் செலுத்த வேண்டும். கட்டண விவரங்கள் பற்றி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் 20,000 தனியார் மருத்துவ மையங்களிலும் 10,000 அரசு மருத்துவ மையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.