அமைச்சராகிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன்

 
அசாருதீன் அசாருதீன்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன்

தெலங்கானா அமைச்சரவையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் நிர்வாகியுமான முகமது அசாருதீன் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநரின் ஒதுக்கீட்டில் அசாருதீன் பேரவை மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 31 ஆம் தேதி அவர் அமைச்சராக பதவியேற்பார் எனக் கூறப்படுகிறது. 

தெலங்கானாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால் அதே தொகுதியில் வெற்றி பெற்ற பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் உறுப்பினர் மகாந்தி கோபிநாத் கடந்த ஜூன் மாதம் காலமானார். இதனையடுத்து இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிடுவதாக அசாருதீன் அறிவித்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனைதொடர்ந்து ஆளுநரின் ஒதுக்கீட்டின்கீழ் அசாருதீனை சட்டப்பேரவை மேலவை உறுப்பினராக நியமிக்கப்போவதாக தெலங்கானா அமைச்சரவை கடந்த 2 மாதங்களுக்கு முன் அறிவித்த நிலையில், நாளை அவர் அமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கபடுகிறது.