கர்நாடக தேர்தல்...வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெளிநாட்டில் பயன்படுத்தப்பட்டதா? - தேர்தல் ஆணையம் விளக்கம்

தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கர்நாடக தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன் தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 9.17 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களித்தனர். வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் 37, 777 இடங்களில் 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. மாலை 6 மணிநிலவரப்படி, கர்நாடகாவில் 72.67 சதவீத வாக்குகள் பதிவாயின. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தற்போது 0.31 சதவீதம் அதிக வாக்குகள் பதிவாகி இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த் நிலையில் தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கர்நாடக தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, தென்னாப்பிரிக்காவிற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒருபோதும் அனுப்பவில்லை. அந்த நாட்டில் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே, தென்னாப்பிரிக்கா தேர்தல்களில் அல்லது உலகில் எங்கும் பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தக்கூடிய எந்தவொரு இயந்திரத்தையும் கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் தேர்தல் ஆணையம் பயன்படுத்தவில்லை என கூறியுள்ளது.