உபி உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள்... தேதி குறித்த தேர்தல் ஆணையம் - முழு அட்டவணை உள்ளே!
உத்தரகண்ட், உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோன பரவல் அதிகரித்துக் காணப்படுவதன் காரணமாக 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. கடும் கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டு கள ஆய்வின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுகிறது என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
அதன்படி உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்படும் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும், மணிப்பூரில் 2 கட்டங்களாகவும், உத்தரகாண்ட் , பஞ்சாப், கோவா ஆகிய 3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கும் என்றும், முறையே பிப்.14, பிப்.20, பிப்.23, பிப்.27., மார்ச் 3, மார்ச் 7 என 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் பிப்.27ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், மார்ச் 3ஆம் தேதி 2ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசம் , பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.